Back to blog

14 June 2026

அற்புத நிகழ்வுகள்! பேரறிவாளனின் நூல் கதிர் பந்தம் இவரது சிரசிற்குள்!!! - திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

By ALP Astrology

கைபேசியில் வந்தப் பெயரை சொன்னது

மத்தாப்புச் சிரிப்புக்கு சொந்தக்காரி எனது மகள் பூஜா. பதின்மூன்று வயதை கடந்த நான்காவது மாதம், இறை சக்தி நிறைந்திருந்தாலும் அதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத அறியா பருவம்.

பிரம்மாண்ட ஸ்வரூபத்தை பார்த்தது போல் அவள் மனதில் ஓர் பதட்டம்; ஓடி வந்து என்னிடம் விவரித்த தருணங்களை உங்களுக்காக ஆச்சர்யத்துடன் பதிவு செய்கிறேன்.

முழு பௌர்ணமியைப் போல இருக்கும் கிழக்கு திசை சூரியன், அதாவது “சித்திரை மாதம்” - வசிக்கும் இடத்தைக் கொண்டு துல்லியத்தில் தொடங்கும் தமிழ் வருடப் பிறப்பு. தென்னடார் நடுக்காடு என்ற ஊரில் இருக்கும் ஸ்ரீ ஆமைகுளத்து பெரிய அய்யனார் கோயிலில் சிறப்பு விசேஷ பூஜைகள். அந்நேரத்தில் ஐயா அவர்களின் இந்த குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக என் குடும்பம், எனது அக்காவின் குடும்பம் மற்றும் எனது நாத்தனாரின் குடும்பம், நாங்கள் அனைவரும் ஐயா அவர்களது குடும்பத்தோடு நான்கு சக்கர வாகனங்களில் ஐந்து நாள் ஆன்மீக பயணம்.

மலர்ந்த தாமரை மலரோடு இந்த மூன்று குடும்ப தாமரை மொட்டுக்கள் இணைந்து ஐயனாரின் அருளைப் பெற்று, ஐயா அவர்களது வீட்டிற்கு திரும்பும் நேரம், நான் எனது கணவருடன் பூஜைப் பொருட்கள், பிரசாத பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு முன்னே செல்கிறோம். எங்களுக்கு பின்னால் வந்த மூன்று வண்டியில் ஐயா அவர்களது மகிழுந்தில் ஐயா அவர்களே ஓட்டிக் கொண்டு வர, அவரது குடும்பத்தோடு எனது மகள் பூஜாவும் எனது நாத்தனாரின் மகளும், அக்காவின் மகளும் சேர்ந்து பயணிக்கின்றனர்.

பின் இருக்கையில் உட்கார்ந்து வரும் எனது நாத்தனார் மகளும், எனது மகள் பூஜாவும் பேசி சிரித்து கொண்டு வரும் அந்நேரத்தில் சட்டென ஒரு அமைதி இடைவேளை.

அப்பொழுது எனது நாத்தனார் மகள் கைபேசியில் அவளது தோழன் “ராஜேஷ்” அனுப்பிய வாட்ஸ்ஆப் தகவலை அவள் சத்தமின்றி மனதிற்குள் படிக்க, அதே நேரம் அக்காவின் மகளுக்கு அவளது தோழி அபிராமியிடமிருந்து கைபேசிக்கு தகவல் கிடைக்க; இதை கண்ணால் பார்த்ததும் என் மகள் பூஜா பேசுவதை நிறுத்தி; பச்சை பசேலனு இருக்கும் இயற்கையின் மத்தியில் பறிப்பதற்கு தயாராகவுள்ள சணல் பயிரின் பூக்களைப் பார்த்து ரசித்தாற்"போல், கண்ணாடி வழியே அழகிய சித்திரங்கள் வேகத்தில் பறந்துக்கொண்டிருந்தது.

ஐயா அவர்கள் “என்ன பூஜா!! ‘ராஜேஷ்’ என்ன சொல்றாரு… அந்தப்பக்கம் அபிராமி என்ன சொல்றாங்க” என்றார்.

திகைப்பில் மூழ்கிய எனது மகள் பூஜா பத்து நொடி கழித்து “அங்கிள் என்ன பேர் சொன்னீங்க” என்றதும் ஐயா அவர்கள் “ராஜேஷ் தானேய்யா” என்கிறார்.

உடனே தன் மனதில் “என்ன இந்த அங்கிள் பின்னாடி நாங்க வச்சிருக்கிற மொபைல வண்டி ஓட்டும் போது பார்த்திட்டு இருந்தாரோ?” என்ற கேள்வி மனதில் ஓடுகிறது.

காரை இவ்ளோ வேகமா, இப்படி பேசிகிட்டே ஓட்டுகிறாரே; வண்டிய எங்கயாவது இடிச்சிரப்போறாரு” என்று தன் மனதில் நினைத்த க்ஷணத்தில்,

அடுத்த குரலில் “அப்படில்லாம் வண்டிய போய் மோதிட மாட்டேன், பத்திரமா வீட்டுக்குப் போயிடலாம்யா” என்கிறார் ஐயா திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள்.

அந்த நொடியில் இருந்து ஒரு மாயாவியை பார்ப்பது போல பரப்பரப்பு எனது மகளுக்கு! பயத்துடன் ஓடி வந்து “அம்மா நான் என்ன நெனச்சாலும் அங்கிள் அப்படியே சொல்றாரு. நான் இனிமேல் இந்த அங்கிள் இருக்கும் பக்கமே போகமாட்டேன்” என்கிறாள் இந்த அற்புதத்தைக் கண்டபின்.

அஷ்டாவதானியாகிய ஐயா வாக்குயோகி அவர்களின் செயலின் திறனைப் பற்றி வேறு ஒரு நிகழ்வையும் இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும்.

ஒரு முறை ஒரு நண்பர் ஒரு வேலைக்காக ஒரு தரகர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அந்த வீட்டிற்கு செல்லும் வழி, வாக்குயோகிக்கு தெரியக்கூடாதென்று மூன்றுமுறையும் வெவ்வேறு சாலையை தேர்ந்தெடுத்த போதிலும், வாக்குயோகி அவர்கள் தன் மனதில் சித்திரம் இட்டது போல, அந்த நண்பரிடம், மூன்றாவது முறை செல்லும் போது, அவரின் நோக்கம் புரிந்துவிட்ட தோரணையில், அவரிடம் “முதல் முறை வந்த போது, இடது பக்கம் திரும்பி, பின்பு வலது புறம் திரும்பி சென்றோம். இரண்டாவது முறை வரும் போது, வலது புறம் திரும்பி பின்பு இடது புறம் திரும்பி, மீண்டும் வலது புறம் சென்றோம். இந்த முறை நேராக சென்று பின்பு வலது புறம் திரும்பி, இடது புறம் செல்கிறோம்” என்று வந்த வழிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக விவரிக்க அந்த நண்பரும் ஆச்சர்யத்துடன், "உங்கள ஏமாத்த முடியுமா சாமி" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது! ஜோதிடக் கட்டங்களை கணிதம் செய்து வாழ்க்கையின் நகர்வுகளை துல்லியமாக சுட்டிக் காட்டும் இவருக்கு, சாலையில் மின்னல் வேகமானாலும், தனக்கு முன்னால் உள்ள வாகனங்களின் நகர்வுகளை நூறு அடிக்கு முன்னரே கணிக்கும் ஆற்றல் அவருடன் முன்னொரு நாள் பயணித்த போது நான் அறிந்ததே.

எனினும் 120 கிலோமீட்டர் வேகத்தில் பொற்பாதம் மிதித்திருக்க, தனக்குப் பின்னே நடக்கும் நிகழ்வுகளைப் பெயரோடு கூறும் ஆற்றலை என்னவென்று சொல்வது?

இவரது சிரசிற்குள் அந்தப் பேரறிவாளனின் தொடர்பை உணர்த்துகிற இந்த நிகழ்வு… ஒரு ஆதாரக்கூறு!!!

என்றென்றும் நன்றியுடன்....

--> --> --> - திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

Chat with us